வெலிமடை, கெப்பட்டிபொல மற்றும் உடபேருவ பிரதேசங்க்களை சேர்ந்த பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போது வெலிமடை ஆதார வைத்தியசாலையில் 10 மாணவர்களும், தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் 18 மாணவர்களும் என மொத்தம் 28 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு சிகிச்சை பெற்று வரும் 10 மாணவர்களில் நான்கு பேருக்கு மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளமை மருத்துவப் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 14 வயதிற்குட்பட்ட ஐந்து சிறுவர்களும், ஐந்து மாணவர்களும் அடங்குவர். இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 18 மாணவர்களில் 10 பேருக்கு இந்நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய மாணவர்களுக்கும் வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்கான முடிவுகள் இன்னும் எதிர்பார்க்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காய்ச்சல் மற்றும் கடுமையான தலைவலி, தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் வாந்தி, தோலில் தடிப்புகள் அல்லது கொப்புளங்கள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் செல்லுமாறு அல்லது பொதுச் சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவிக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்
இந்நோய் பரவுவதைத் தடுக்கும் முகமாகப் பொதுமக்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிதல் , கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி கைகளைத் அடிக்கடி சுத்தமாகக் கழுவுதல் மற்றும் முறையான சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பேணுவதோடு, அதிக மக்கள் நடமாட்டம் அதிகமான இடங்களைத் தவிர்த்தல் போன்ற சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
