இலங்கையில் இனிவரும் காலங்களில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தில் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை குறிப்பிடாத பாடசாலை மாணவர்களினதும், அதேபோல் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களினதும் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடாதிருக்க பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள இந்தப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் கோருவதற்கும் பரீட்சைத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்களின் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்துமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக வேறு இலக்கங்களை இடும் சில விண்ணப்பதாரர்கள், பரீட்சைக்குத் தோற்றும்போது உண்மையான தேசிய அடையாள அட்டையைச் சமர்ப்பிக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளது.
இதன் காரணமாக பெறுபேறுகளை வெளியிடும் போது பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.
சிரமங்களுக்கு மத்தியிலும் இதுவரையில் அத்தகைய விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், இனிவரும் காலங்களில் அவ்வாறு செய்யப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வது அனைத்து விண்ணப்பதாரர்களினதும் பொறுப்பாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
