யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் , நெல்லியடி ஊடாக தப்பி செல்லும் போது நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பகுதியில் வீதியில் நின்ற பெண்ணொருவரின் ஒரு பவுண் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துக்கொண்டு தப்பி சென்றனர்.
வீதியில் நின்ற ஏனையவர்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட போதிலும் அவர்கள் தமது நவீன ரக மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றுள்ளனர்.
இருந்த போதிலும் , மோட்டார் சைக்கிள் இலக்கத்தை குறித்துக்கொண்டு , அது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
விரைந்து செயற்பட்ட பொலிஸார் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்ததை அடுத்து, நெல்லியடி பகுதி ஊடாக குறித்த மோட்டார் சைக்கிளில் இருவரும் தப்பி செல்வதை கண்ணுற்று , நெல்லியடி பொலிஸார் இருவரையும் மடக்கி பிடித்தனர்.
விசாரணைகளின் போது , அறுக்கப்பட்ட தங்க சங்கிலியையும் அவர்களின் உடைமையில் இருந்து மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் மீட்கப்பட்ட தங்க சங்கிலியையும் , வழிபறிக்கு பயன்படுத்தப்பட்ட நவீன ரக மோட்டார் சைக்கிளையும் , வழிப்பறியில் ஈடுபட்ட இருவரையும் ஒப்படைத்துள்ளனர்.
