வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகள் பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களில் (Day Care Centers) சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலையீட்டுடன் எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் கௌரவ பிரதி அமைச்சர் (வைத்தியர்) நாமல் சுதர்சன ஆகியோரின் தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின் போதே வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் இந்த விபரங்களை வெளியிட்டனர்.
$400 டொலர் வருமானம் பெறுவோருக்கு மாதாந்தக் கொடுப்பனவு
சிறு குழந்தைகள் உள்ள பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதனால் சமூகத்தில் எழும் பல்வேறு பிரச்சினைகளில் தலையிடுமாறு, இதற்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளருக்குப் (உள்நாட்டு விவகாரங்கள்) பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன. அப்பரிந்துரைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.
இதற்கமைய, வெளிநாடுகளுக்குப் பணியாற்றச் சென்றுள்ள பெற்றோரின் மாதாந்த வருமானம் 400 அமெரிக்க டொலராக ($400) அல்லது அதற்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே, அவர்களின் 2 வயது முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளுக்கு இக்கொடுப்பனவு ஏற்புடையதாகும். இத்திட்டத்தை முதற்கட்டமாக நடைமுறைப்படுத்துவதற்காக 10 மில்லியன் ரூபாய் (ரூ. 10,000,000) ஒதுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதற்கான இறுதி அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதன் பின்னர், மாவட்டச் செயலகங்களின் ஊடாக அங்கீகரிக்கப்பட்ட பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களுக்கு இம்மாதாந்தக் கொடுப்பனவை நேரடியாக வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மிகவும் சாதகமான இந்த நலன்புரித் திட்டம் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் பரந்தளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இதன்போது வலியுறுத்தினார்.
