பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகளை மூடுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறும் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களம் எச்சரித்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையின்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் நேற்று (ஜூன் 28) மாலை முதல் மூடப்பட்டுள்ளதுடன், பொசன் பூரணை தினமான இன்றும் (ஜூன் 29) முழுமையாக மூடப்பட்டிருக்கும்.
இவை அனைத்தும் நாளை (ஜூன் 30) காலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவுகளை மீறி, குறிப்பிட்ட காலப்பகுதியில் சட்டவிரோதமாக திறக்கப்படும் அல்லது மதுபான விற்பனையில் ஈடுபடும் நிலையங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதுடன், அவர்களுக்கு எதிராக கலால் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களம் எச்சரித்துள்ளது.
