மட்டு நகரில் மீன் பிடிக்க சென்றவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி-வலையில் சிக்கிய சடலம்

 

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலையில் மீட்கப்பட்டுள்ளதாகக் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லடி புதிய டச்பார் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்திரசேகரன் கஜேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

 

குறித்த வாவியில் சம்பவ தினமான இன்று காலை 6.30 மணியளவில் வழமைபோல மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சடலம் ஒன்று சிக்கியதையடுத்து, அதனை மீனவர் கரைக்கு இழுத்து வந்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினார். 

 

குறித்த நபர் மதுபோதையில் வாவியில் நீராடிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளார் எனப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியைப் பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment