தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் அவரைத் தான் நிச்சயமாக உயிருடன் பாதுகாத்திருப்பேன் என்று முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
இறுதிப் போர் முடிவுக்கு வந்த பின்னர் பாலசந்திரன் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டிருந்தால் அவரை நான் மிகவும் பாதுகாப்பான முறையில் உயிரோடு வைத்திருந்திருப்பேன்.
அவர் பிரபாகரனின் மகன் என்பதற்காக மட்டுமல்ல, ஒரு மனிதநேய அடிப்படையிலேயே நான் இந்த முடிவை எடுத்திருப்பேன். ஏனெனில், போர் மௌனித்த பிறகு அவரைத் தாண்டி எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
பலரை காப்பாற்றியுள்ளேன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த பலரைத் தான் ஏற்கனவே பாதுகாப்பாக வைத்திருந்து, பின்னர் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர் பாலசந்திரனுக்கும் அத்தகையதொரு பாதுகாப்பைத் தம்மால் வழங்கியிருக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் பாலசந்திரனின் மரணம் தொடர்பான விவாதங்கள் இன்னமும் நீடித்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சரின் இந்த கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.
இறுதிப் போர் மௌனித்ததைத் தொடர்ந்து, இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பாலசந்திரன் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
