துருக்கியில் உள்ள அந்தல்யா (Antalya) சர்வதேச விமான நிலையத்தில் 267 பயணிகளுடன் டாக்ஸிவேயில் சென்று கொண்டிருந்த டர்கிஷ் ஏர்லைன்ஸ் போயிங் 777 ரக விமானம் ஒன்று, எதிர்பாராதவிதமாகத் தரையிறங்கும் ரேடார் ஆண்டெனா கம்பத்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில், விமானத்தின் வலது இறக்கை பகுதி மற்றும் பயணிகள் அமர்ந்திருக்கும் கேபின் பக்கவாட்டுப் பகுதியில் ஒரு பிரம்மாண்ட ஓட்டை (Huge Hole) விழுந்துள்ளது.
இந்த விபத்தால் விமான நிலைய வளாகத்தில் சில நிமிடங்கள் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது. சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது,
நேற்றையதினம் (12) இஸ்தான்புல்லில் இருந்து 267 பயணிகளுடன் புறப்பட்ட டர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘TK-2430’ என்ற அந்த விமானம், அந்தல்யா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது
அதன் பின்னர் பயணிகள் இறங்கும் முனையத்தை நோக்கி (Gate) ஓடுதளத்தில் இருந்து டாக்ஸிவே வழியாக விமானம் மெதுவாகத் திரும்பிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது விமானத்தை இயக்கிய விமானிகள் தவறான பாதையைத் (Wrong Turn) தேர்வு செய்து, பிரம்மாண்ட விமானங்களுக்குப் பொருந்தாத ஒரு குறுகிய டாக்ஸிவே பாதைக்குள் நுழைந்ததே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
மிகவும் குறுகிய பாதையில் போயிங் 777 போன்ற பெரிய அளவிலான விமானம் திரும்ப முற்பட்ட போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த தரையிறங்கும் ரேடார் ஆண்டெனா கம்பத்தின் மீது விமானத்தின் வலது இறக்கையின் நுனிப்பகுதி அதிவேகமாக மோதியது.
இதனால் விமானத்தின் உட்புறச் சுவரில் ஒரு பெரிய ஓட்டை விழுந்ததைக் கண்டு உள்ளே இருந்த பயணிகள் மரண பயத்தில் அலறினர். விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் அவசரக் கால மீட்புக் குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
விமானத்தில் இருந்த 267 பயணிகளும் அவசர அவசரமாகப் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டனர்.
இந்த அதிதிடீர் விபத்தில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகளுக்குப் பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், ஒரு பயணிக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் டர்கிஷ் ஏர்லைன்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்துத் துருக்கி விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
