ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

 

ஆசிரியர் சேவையை இந்நாட்டின் அதிக சம்பளம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். 

வனாதவில்லுவ, நாகமடுவ மகா வித்தியாலயத்தின் புதிய வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, உலகை உருவாக்கும் ஆசிரியர் சேவையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக படிப்படியாக சம்பளத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டினார். 

நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2021 ஆம் ஆண்டு முதல் தாமதமடைந்திருந்த ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இவ்வருடம் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 

அதன்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

எதிர்வரும் நாட்களில் அதற்கான போட்டிப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதுடன், எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சைகளின் அடிப்படையில் வெளிப்படையான முறையில் இந்த ஆட்சேர்ப்புகள் இடம்பெறவுள்ளன. 

தற்போதுள்ள பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வியினால் பிள்ளைகளுக்குப் புறப்பாடச் செயற்பாடுகள் தவறிப்போயுள்ளதாக பேராசிரியர் சந்தன அபேரத்ன இதன்போது சுட்டிக்காட்டினார். 

கடந்த சித்திரைப் புத்தாண்டு காலத்தில் நீரில் மூழ்கி இடம்பெற்ற மரணங்களைக் கவனத்திற் கொள்ளும்போது, பிள்ளைகளுக்கு நீச்சல் போன்ற உயிர்பாதுகாப்புத் திறன்களை வழங்குவதன் முக்கியத்துவம் தெளிவாகுவதாகவும் அமைச்சர் கூறினார். 

பாடத்திட்டங்களைத் திருத்தியமைத்து கல்வி முறையில் புதிய மாற்றமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் கீழ் எதிர்காலத்தில் தரம் 09 இல் தேசிய மட்டத்திலான பரீட்சையொன்றை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வெளிப்படுத்தினார். 

இதன் மூலம் பிள்ளைகள் தமது விருப்பத்திற்கேற்ப கல்வி சார் துறைக்கோ அல்லது தொழிற்கல்வி துறைக்கோ செல்லும் வாய்ப்பு ஏற்படுவதுடன், அதற்காக சுமார் 50 தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மேலும் தெரிவித்தார்.

Post a Comment