யாழில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் தில்லாலங்கடி சம்பவம்-மட்டு நகரில் சிக்கிய பரிதாபம்

 

போக்குவரத்து காவல்துறையினரால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த குற்றச்சாட்டில் யாழ் கோப்பாய் காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரை  செவ்வாய்கிழமை (11) கைது செய்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 4ம் திகதி மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த ஒருவரை நிறுத்தி ஆவணங்களை சோதனையிட்டனர்

இதன் போது மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் காவல்துறையினரால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை காட்டியுள்ளார் குறித்த தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் கடந்த 2024 ம் ஆண்டு யாழ் கோப்பாய் காவல்துறை பிரிவில் இடம்பெற்ற வீதி விபத்தில் காவல்துறையினரால் கைப்பற்றி நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் கோப்பாய் காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்த காத்தான்குடியைச் சேர்ந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி( 01.08.2024) தற்காலிகமாக சாரதி அனுமதி பத்திரம் ஒன்றை வழங்கியதுடன் அதனை தொடர்ந்து போலியான கோப்பாய் காவல் நிலைய இறப்பர் முத்திரையை பயன்படுத்தி தற்காலிக போலியான சாரதி அனுமதி பத்திரத்தை 8 முறை நீடித்து கொடுத்துள்ளார்.என காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த காவல்துறை கான்ஸ்டபிள் வீட்டை முற்றுகையிட்ட காவல்துறையினர் இறப்பர் முத்திரை ஒன்றை மீட்டதுடன் போலி தற்காலிகமான சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த சம்மாந்துறையைச் சேர்ந்த குறித்த நபரை கைது செய்து மட்டு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியதையடுத்து அவரை  (12) வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதன் பின்னர் போலியான ஆவணங்களை தயாரித்து வழங்கி வந்த குறித்த காவல்துறை கான்ஸ்டபிளை இன்று செவ்வாய்க்கிழமை காவல்நிலையத்துக்கு வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்ய அழைப்பு விடுத்த நிலையில் அங்கு சென்ற அவரை கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்டவரை நாளை 13 ம் திகதி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.       

Post a Comment