வவுனியா திருநாவற்குளத்தில் புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி!
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன், திருநாவற்குளம் பகுதியில் உள்ள புகையிரத கடவையை கடக்க முயன்ற முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த புகையிரத கடவையானது பாதுகாப்பற்ற முறையில் இருந்ததே இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்துடன், முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து காரணமாக முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பாக மக்கள் நீண்டகாலமாக முன்வைத்துவரும் கோரிக்கைகளுக்கு மத்தியிலும் இவ்வாறான விபத்துக்கள் தொடர்வது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.





