28 வாகனங்களை தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை நகரில் பயன்பாட்டில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படும் 28 வாகனங்களுக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளும், மோட்டார் வாகன பரிசோதகர்களும் இணைந்து தலவாக்கலை பகுதி வழியே பயணித்த பேருந்துகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வேன்கள் மற்றும் லொறிகள் உட்பட 40 வாகனங்கள் வீதிப் பயன்பாட்டிற்கு தகுதியான நிலையில் உள்ளதா என்பது குறித்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதன்போது, பல்வேறு குறைபாடுகளுடன் தகுதியற்ற நிலையில் இயக்கப்பட்டு வந்த 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு, அவற்றின் வருமான உரிமங்கள் பொறுப்பேற்கப்பட்டதாக மோட்டார் வாகன பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 4 தனியார் பேருந்துகள், 15 முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 28 வாகனங்கள் வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தும் வரை அவ்வாகனங்களை இயக்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
