கொக்குவில் பனிச்சையடி- கொக்குவில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திராய்மடு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதற்கு எதிர்த்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தபோதே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து கொக்குவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ஏ9 வீதியில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள வடமாகாண விளையாட்டு வளாகத்திற்கு அருகில், யாழ்ப்பாணம் திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை கடக்க முயன்ற பாதசாரி ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பாதசாரி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்தவர் ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த 62 வயதுடைய பாதசாரி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
