நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் அதிர்ந்தது தென்னிலங்கை-வெளியான அதிர்ச்சி காரணம்

குருநாகல், வெல்லவ பகுதியில் நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று (23) காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 46 வயதுடைய பெண் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் கடந்த காலத்தில் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் நபரொருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 

குறித்த பெண் இதற்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்திருந்த போது, அந்த நபருடன் வாழ்ந்து வந்ததாகவும், பின்னர் மீண்டும் வெளிநாட்டிற்குச் சென்று திரும்பியதும் பிள்ளைகளின் வேண்டுகோளுக்கிணங்க அவரது சட்டப்பூர்வ கணவருடன் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இதன்படி, சட்டப்பூர்வ கணவரின் வீட்டில் இருந்தபோதே, அவருடன் முன்னர் தொடர்பில் இருந்த நபரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

 

பொலிஸ் விசாரணைகளின்படி, சந்தேக நபர் வீட்டின் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

 

இச்சம்பவம் தொடர்பாக வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment