அரச ஊழியர்களுக்கு வழங்க இருக்கும் அரிசி தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்

 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காலாவதியாகும் நிலையிலுள்ள அரிசியை அரச அதிகாரிகளுக்கு வழங்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய விவசாய சம்மேளனத்தின் தலைவர் அனுராத தென்னகோன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

காலாவதியாகும் நிலையிலுள்ள அரிசியை தவணைக்கட்டண முறையில் அரச அதிகாரிகளுக்கு வழங்கி, அவர்களை கட்டாயப்படுத்தி நுகர வைக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள, காலாவதியாகும் நிலையிலுள்ள 1,15,000 மெட்ரிக் தொன் நெல்லை அரிசியாக்கி, தலா ஒரு அரச உத்தியோகத்தருக்கு 20 கிலோ கிராம் வீதம் தவணை முறையில் செலுத்தக் கூடிய வகையில் வழங்குவதற்கு வர்த்தக அமைச்சர் மேற்கொண்டுள்ள அறிவிப்பானது, அரச ஊழியர்களின் கண்ணியத்திற்கும் கௌரவத்திற்கும் விடுக்கப்பட்ட பலத்த சவாலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலாவதியாகும் இந்த நெல் தொகையை அரிசியாக்குவதன் மூலம் பெறப்படும் 71,875 மெட்ரிக் தொன் அரிசியை விலங்கு உணவாக வெளியிடுவதற்கு முன்னர், அதனை 14 இலட்சம் அரச ஊழியர்களுக்கு கட்டண அடிப்படையில் வழங்கி, அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தலைவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கும், பருவ நெல் அறுவடை கொள்வனவை முறைப்படுத்துவதற்கும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் இருப்புகளை உடனடியாக அரிசியாக்கி சந்தைக்கு விடுவிக்குமாறு விவசாய தலைவர்கள் பலமுறை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், அரசாங்கம் அதனைப் பொருட்படுத்தாமல் செயற்பட்டதால், தற்போது இந்த நெல் இருப்புக்கள் விலங்கு உணவாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகள் கடுமையான பொருளாதார வறுமையில் வாடுபவர்கள் அல்லர் என வலியுறுத்திய அவர், வர்த்தக அமைச்சரின் இந்த அறிக்கை அரச சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அதன் கௌரவத்திற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு கறையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பி, 75 சதவீதத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள் வழங்கிய மக்கள் ஆணையை இந்த அரசாங்கம் இழிவுபடுத்தியுள்ளதாகவும் அநுராத தென்னகோன் கடுமையாக சாடியுள்ளார். 

Post a Comment