எபோலா வைரஸ் பரவல் தொடர்பான அபாயகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் இலங்கை மேற்கொண்டுள்ளதாக பொது சுகாதார விசேட நிபுணர் வைத்தியர் துஷானி தாபரேரா தெரிவித்துள்ளார்.
எபோலா வைரஸின் தற்போதைய நிலைவரம் குறித்து இன்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களுக்கு இணங்க, சுகாதார அமைச்சு தற்போது தேவையான ஆயத்தத் திட்டங்களையும் மற்றும் அதற்கான ஒத்திகைகளையும் முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.எபோலா வைரஸ் பரவல் பதிவாகியுள்ள கொங்கோ மற்றும் உகண்டா போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் நபர்கள் குறித்து விசேட கண்காணிப்பு செயல்முறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தல் பிரிவினால் விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் ஊடாக வருகை தரும் பயணிகள் கண்காணிக்கப்படுவதுடன், சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகளைக் கொண்ட நபர்கள் பற்றிய தகவல்கள் தொற்றுநோயியல் பிரிவுக்கு உடனடியாக அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.
எபோலா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களை அனுமதித்து, அவர்களுக்குத் தேவையான சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக IDH வைத்தியசாலை தயார்படுத்தப்பட்டுள்ளதாக விசேட நிபுணர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
