மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி கிளையில் இன்று சனிக்கிழமை காலை 6.00 மணியளவில் திடீரென தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
வங்கி வளாகத்தில் இருந்து திடீரென கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் வெளிவருவதைக் கண்ட மக்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாக விபத்து குறித்து தீயணைப்புப் பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலறிந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கடுமையான போராட்டத்துக்கு மத்தியில் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
அதிகாலை நேரம் என்பதால் வங்கியில் ஊழியர்களோ அல்லது வாடிக்கையாளர்களோ இல்லாததால் பெரும் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டன. மின்சார ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.
விபத்தினால் ஏற்பட்டுள்ள சொத்து விபரங்கள் மற்றும் சேத விபரங்கள் இன்னும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை. சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
