காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஆடம்பர ரயிலுடன் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாலியபுர பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவை ஒன்றிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சாலியபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுயதொழில் செய்து வந்த அவர், அனுராதபுரம் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று ஐஸ் பக்கெட்டுகளை (Ice packets) வியாபாரத்திற்காகக் கொடுத்துவிட்டு, மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.
இருப்பினும், இந்த ரயில் கடவையில் ரயில் கேட்களோ (Rail gates) அல்லது ரயில் கேட் காப்பாளர்களோ (Train gator) நியமிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், ரயில் பாதையின் இருபுறமும் வளைவுகள் காணப்படுவதால், ரயில் பாதைக்குள் நுழையும் வரை இரு பக்கங்களிலும் இருந்து வரும் ரயில்களைப் பார்க்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த ரயில் பாதையில் மேலும் ஒரு பயங்கர விபத்து ஏற்படுவதற்கு முன்னர், இதற்குத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் மேலும் வலியுறுத்தி வருகின்றனர்.
