இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலையை உயர்த்திய போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.
லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாயினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாயினாலும் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதற்கிடையில், எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, ஓர் இடைக்கால பேருந்து கட்டண திருத்தத்தை மேற்கொள்ளுமாறு லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவிருக்கும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு முன்னதாக இந்த இடைக்கால திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
அதன்படி, வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 சதவீத கட்டண உயர்வை அவர்கள் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
