மட்டு நகரில் கிணற்றில் வீசப்பட்ட பெண்-சற்று முன் உடைந்தது மர்மம்

 

மட்டக்களப்பு, தாந்தாமலை - நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 24 மணித்தியாலங்களுக்குள் துரிதமாக செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர்.

மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் மூலம், காஞ்சிரங்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மற்றும் ஒரு இளைஞன் என மூவர் நேற்று (21) இரவு வவுணதீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.


கடந்த வியாழக்கிழமை வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு 2 ½ வயது குழந்தையுடன் சென்ற இளம் தாய் ஒருவர் காணாமல் போனார். மறுநாள் வெள்ளிக்கிழமை குறித்த தாய் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டதுடன், அவரது குழந்தை வயல் பகுதியில் அழுது கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது.


மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் வழிகாட்டலில், விசேட குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்தனர். இதன்போது குறித்த தாயை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி மற்றும் அவருடன் இருந்த பெண் குறித்து தகவல்கள் கிடைத்தன.


வந்தாறுமூலை ஆலையடி வீதியில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கு மறைந்திருந்த 26 வயதுடைய சோமசுந்தரம் சர்லியாவைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் போது, அவரது கணவரான 34 வயதுடைய வெற்றிவேல் சதீஸ்வரன் மற்றும் அவரது தம்பியான 22 வயதுடைய வெற்றிவேல் தனோஜன் ஆகியோர் வவுணதீவில் வைத்து கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் மீட்கப்பட்டது.


கைது செய்யப்பட்ட கணவன் மனைவி, சம்பவ தினமான வியாழக்கிழமை வந்தாறுமூலையில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து கொக்கட்டிச்சோலை பகுதிக்குச் சென்று, பின்னர் ஆயித்தியமலை பகுதிக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, வவுணதீவு பிரதேச செயலக அலுவலகத்திற்கு முன்னால் குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்த இளம் தாயைக் கண்டு, முச்சக்கர வண்டியை நிறுத்தி எங்கே போவதாகக் கேட்டுள்ளனர். அவர் மட்டக்களப்பு நகருக்குப் போகப் போவதாகத் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து, குறித்த பெண் தாங்களும் அங்கு செல்வதாகக் கூறி வருமாறு அழைத்துள்ளார். அதற்கு இளம் தாய் முச்சக்கரவண்டியில் போகப் பணம் இல்லை எனக் கூறியபோது, 100 ரூபாய் தந்தால் போதும் எனத் தெரிவித்து இளம் தாயையும் குழந்தையையும் ஏற்றிக்கொண்டு நகரை நோக்கிப் பயணித்துள்ளனர். அப்போது தான் அடகு வைத்த குழந்தையின் தங்க ஆபரணத்தை மீட்கப் போவதாகத் தெரிவித்துக் கொண்டே நகரை வந்தடைந்து குழந்தையுடன் இளம் தாய் இறங்கியுள்ளார்.


இறங்கிய அந்த இளம் தாய்க்குப் பின்னால் குறித்த பெண்ணும் தானும் வருவதாகத் தெரிவித்துப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அங்கு அவர் அடகு வைத்த தங்க ஆபரணத்தை மீட்டெடுத்துக் கொண்ட பின்னர், குறித்த பெண் தாங்கள் மீண்டும் வவுணதீவு செல்வதாகவும், உங்களுடன் இன்னொருவரை ஏற்றி குறைந்த கட்டணத்தில் கொண்டு சென்று விடுவதாகவும் தெரிவித்து அவர்களை மீண்டும் ஆட்டோவில் ஏற்றியுள்ளார். வலையிறவு பாலத்தை அண்மித்த போது, அவருக்கு மயக்க மருந்து கலந்த பழச்சாறு போத்தலைக் குடிப்பதற்கு கொடுத்துள்ளனர். அவர் அதனை வாங்கி குடித்ததையடுத்து மயக்கமடைய ஆரம்பித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து குறித்த முச்சக்கர வண்டி வலையிறவு பாலத்தைக் கடந்து தாண்டியடி நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், அங்கு முச்சக்கர வண்டியை நிறுத்தியபோது அதிலிருந்த குறித்த பெண் இறங்கியுள்ளார். அங்கு காத்திருந்த 22 வயதுடைய இளைஞன் முச்சக்கர வண்டியில் ஏறிக்கொண்ட போது, மயக்கத்தில் இருந்த இளம் தாய் தன்னை இறக்கிவிடுமாறு கோரிய நிலையில் முற்றாக மயக்கமடைந்துள்ளார்.


இதையடுத்து அவரது கழுத்தில் இருந்த 5 பவுண் தாலிக்கொடி மற்றும் ஒரு பவுண் தங்கச் சங்கிலியைக் கழற்றிக் கொள்ளையடித்துக் கொண்டு, குழந்தையைக் கொத்தியபுலை வயல் பகுதியில் வீசி எறிந்துவிட்டு, மயக்கமடைந்த இளம் தாயைத் தாந்தாமலை பகுதியிலுள்ள நெல்லிக்காடு வயல் பகுதிக்குக் கொண்டு சென்று, அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பி வீட்டிற்குச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை அடகு வைத்துப் பணம் பெற்றுள்ளனர்.


அதேவேளை, கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணையும் இதே பாணியில் பழச்சாற்றில் மயக்க மருந்து கொடுத்து மயங்கச் செய்து, அவரின் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டு அந்தக் கிணற்றுக்குள் கொண்டு சென்று போட்டுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்டவர்களிடம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்தப் பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.