தலவாக்கலை பஸ் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள மிடில்டன் பகுதிக்கு செல்லும் குறுக்கு வழியில் செல்லும் பெண்களுக்கு குடிபோதையில் உள்ள நபர்கள் இடையூறு விளைவிப்பதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன.
மேற்படி பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் மதுவை கொள்முதல் செய்பவர்கள் பகல் நேரங்களிலும் குறித்த பகுதியில் அமர்ந்து மது அருந்துவதால் அவ்வழியே செல்லும் பெண்களுக்கு கடும் அசௌகரியங்கள் ஏற்படுகின்றமை குறித்து பல தடவைகள் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை 5.30 மணியளவில் அவ்வழியே சென்ற பெண்ணை மதுபானம் அருந்திக்கொண்டிருந்த இளைஞர்கள் கேலி செய்ததுடன் ஒரு இளைஞர் பியர் போத்தலில் அவரை தாக்க முயற்சித்து அவரை துரத்தியுள்ளார்.
குறித்த பெண் அச்சத்துடன் ஓடிச்சென்று தனது கையடக்கத்தொலைபேசி மூலம் குறித்த இளைஞரை படம் எடுத்துள்ளார். அதையடுத்து அந்த இளைஞரும் இப்பெண்ணை தனது கையடக்கத்தொலைபேசியில் படம் எடுத்ததுடன் பியர் போத்தலை காட்டி மிரட்டியுமுள்ளார்.
இதையடுத்து, குறித்த பெண் அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கமான 119 இற்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். ஆனால், முறைப்பாட்டை பதிவு செய்து அரை மணித்தியாலயத்துக்கும் மேல் தலவாக்கலை பொலிஸ் நிலையத்திலிருந்து எவரும் அவ்விடத்துக்கு வருகை தராததால் அவர் மீண்டும் முறைப்பாடு செய்துள்ளார். அதன் பின்னர் தலவாக்கலை பொலிஸிலிருந்து ஒருவர் கதைத்து தகவல்களை எடுத்துக்கொண்டாலும் அதன் பின்னரும் எவரும் அவ்விடத்துக்கு வருகை தரவில்லையென குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
குறித்த வழியாகச் செல்லும் பாடசாலை மாணவிகள், குடும்பப் பெண்களுக்கு மதுபோதையில் இருப்பவர்கள் இவ்வாறாக தொடர்ச்சியான இடையூறையும் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி வரும் அதேவேளை மதுபான போத்தல்கள், பியர் டின்களையும் இந்த பாதையில் வீசிச்செல்கின்றனர். இது குறித்து தலவாக்கலை பொலிஸார் மற்றும் அவ்விடத்தில் மதுபானசாலை அமைக்க அனுமதி வழங்கிய தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.