மன்னார் கடல் பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரண்டு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மன்னார், வங்காலைப்பாடு கடல் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் படகும் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் மீன்பிடிப் படகுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது படகுகள் இரண்டும் பலத்த சேதமடைந்த நிலையில் படகில் இருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.
விபத்தின் பின்னர் ஒரு மீனவர் கடலில் காணாமல் போயிருந்தார். சக மீனவர்கள் நீண்ட நேரம் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் பலனாக ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்தவர் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த மீனவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த விபத்தில் காயமடைந்த வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு மீனவர் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார், மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளும் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்து, விபத்துக்கான காரணம் மற்றும் மேலதிக விபரங்கள் தொடர்பாக அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடல் தொழிலுக்குச் சென்ற இடத்தில் நேர்ந்த இந்தத் துயர சம்பவம் மன்னார் மீனவ சமூகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
