22 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு எதிராக நாளை கொழும்பு கோட்டையில் பிரம்மாண்ட போராட்டம்: ரஞ்சித் மத்தும பண்டார

 

அரசாங்கம் கொண்டுவர முனையும் 22 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நாளை பிற்பகல் 2:00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள் மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பிரம்மாண்ட போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக சமகி ஜன பலவேகயவின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 22 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு அரசாங்கத்தைத் தவிர நாட்டில் உள்ள ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் முழுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக தெரிவித்த அவர், இந்நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு இந்த திருத்தச் சட்டமூலத்திற்கு மக்களின் கருத்துக்கணிப்பு (Referendum) நடத்தப்படுவது அத்தியாவசியமானது எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்த விவகாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் நீதித்துறையை விமர்சிக்கத் தயாராக இல்லை என்றும், இது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காகவே தாம் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், "எவ்வாறாயினும் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியே தீருவோம்" என்ற பாணியில் நீதி அமைச்சர் வெளியாருக்கும் செய்திகளுக்கும் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவிப்பது, அவர் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயல்வதையே தெளிவுபடுத்துகிறது என சாடிய பொதுச்செயலாளர், நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நடந்து கொள்ளும் நீதி அமைச்சர் தற்போது ஒரு வேடிக்கையான மனிதராக மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

Post a Comment