துணுக்காய் முதல் முல்லைத்தீவு வரையான பிரதான் வீதிக்கான இலங்கை போக்குவரத்து சேவை இன்று (10) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விடுதலை புலிகளுக்கும் இராணுவத்தினருக்குமான யுத்தத்தின் போது குறித்த போக்குவரத்து சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
எனினும் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் பல்வேறு குறைப்பாடுகளின் நிமித்தம் போக்குவரத்து இடம்பெறவில்லை.
இந்த நிலையில், பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக, துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மற்றும் மாவட்ட மட்டக் கூட்டங்களில், துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பதன் அவசியம் தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதன் பயனாக, குறித்த பேருந்து சேவை இன்று முதல் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலை 6.00 மணி – துணுக்காய் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் இந்த பேருந்து காலை 6.10 இற்கு மல்லாவிகடகும் காலை 7.00 மணிக்கு மாங்குளத்திற்கும்; காலை 7.10 மணிக்கு மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கியும்; புறப்படும்.
மேலும், குறித்த பேருந்து முல்லைத்தீவிலிருந்து மாலை 4.15 மணிக்கு மீண்டும் துணுக்காய் நோக்கிப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
