கனடா தமிழாழி தொலைக்காட்சி உலக சாதனை நிகழ்வில் பங்கேற்ற இலங்கை கலைஞர்களுக்கு கௌரவம்...

 கனடா தமிழாழி பேரவை மற்றும் கனடா தமிழாழி தொலைக்காட்சி இணைந்து நடத்திய தந்தையர் தின உலக சாதனை நிகழ்வில் பங்குபற்றி சாதனை படைத்த இலங்கை கலைஞர்களைக் கௌரவித்து சான்றிதழ்கள் வழங்கும் உன்னத விழா, நேற்றைய தினம் மாலை (09-08-2026) கொழும்பு புறக்கோட்டை ஐந்து லாம்புச் சந்தியில் உள்ள பழைய நகரசபை மண்டபத்தில் இலங்கை தமிழ் கலைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான கே.டி. குருசாமி மற்றும் பழ. புஷ்பநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

அத்துடன் சிறப்பு அதிதிகளாக கொழும்பு பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் திருமதி கிறிஸ்டி ரோஸ் மற்றும் பிரபல திரைப்பட இயக்குனர் தினேஷ் கனகராஜா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்விழா குறித்து கனடா தமிழாழி பேரவை மற்றும் தொலைக்காட்சியின் கொழும்பு மண்டலச் செயலாளரும், இலங்கை தமிழ் கலைஞர் சங்கத்தின் தலைவருமான பொன். பத்மநாதன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த ஜூன் மாதம் 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை 27 நாடுகளைச் சேர்ந்த 1,048 கலைஞர்கள் பங்குபற்ற Zoom இணையவளி நேரலையாகத் தொடர்ந்து 1,000 மணித்தியாலங்கள் நடைபெற்ற தந்தையர் தின உலக சாதனை நிகழ்வில், இலங்கையிலிருந்து மொத்தம் 36 கலைஞர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்ததாகக் குறிப்பிட்டார்.

அதில் தலைவர் பொன். பத்மநாதன் தலைமையில் 20 கலைஞர்களும், மட்டக்களப்பைச் சேர்ந்த மதிபாலசிங்கம் தலைமையில் 10 கலைஞர்களும், கொழும்பைச் சேர்ந்த தாட்சாயினி அம்மையார் தலைமையில் 6 கலைஞர்களும் இலங்கையின் சார்பில் பங்கேற்று உலக சாதனை அங்கீகாரத்தைப் பெற்றனர்.

இந்த உன்னத நிகழ்வில், தலைவர் பொன். பத்மநாதன் அவர்களின் தலைமையில் மற்றும் வருகை தந்த அதிதிகளின் முன்னிலையில், உலக சாதனை படைத்த இலங்கை கலைஞர்கள் அனைவருக்கும் உத்தியோகபூர்வ உலக சாதனை சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

அத்துடன் மேற்படி  நிகழ்வில்  பரதநாட்டிய நடனம், மேடை  நாடகம், மெல்லிசை பாடல் கள் என பல்சுவை கதம்ப நிகழ்ச்சிகளை  கலைஞர்கள் மேடையேற்றியிருந்தனர். 

மேலும், இவ்விழாவினை இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளருமான பிரபல கலைஞர் ஈஸ்வர பிரசாத் அவர்கள் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











Post a Comment