மஹர சிறைச்சாலை சம்பவம், சிறைச்சாலையின் நிர்வாகத்தை முடக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதியாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இன்று (04) நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இவ்வாறான சம்பவங்கள் ஏனைய சிறைச்சாலைகளுக்கும் பரவுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எத்தகைய சூழ்நிலை எழுந்தபோதிலும், உயிரிழப்புகளைக் குறைத்து நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இது தவிர, மேலும் இரண்டு அல்லது மூன்று சிறைச்சாலைகளில் இவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்படுவது குறித்துக் கிடைத்த தகவல்களும் சிறைச்சாலைகள் திணைக்களத் நிர்வாக பொறுப்பாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்றது கைதிகளுக்கு இடையிலான போதைப்பொருள் சார்ந்த மோதலாகும். ஆனால், மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் கைதிகளால் நிர்வாகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஒரே நேரத்தில் சுமார் ஆயிரம் கைதிகள் திரண்டுவந்து, இதுவரை இல்லாத வகையில் தீ வைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டதன் பின்னணியில், அமைக்கப்பட்ட சதிக்குழுவொன்று இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இவ்வாறான செயல் இடம்பெற்றிருப்பின், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், தீ வைத்து அழிக்கப்பட்டது பொதுமக்களின் வரிப்பணம் என்பதையும், அவற்றை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அந்தப் பணமே பயன்படுத்தப்படும் என்பதையும் கைதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
இதனிடையே, அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் தலைமையில், அமைச்சர் ஆனந்த விஜயபால உள்ளிட்ட செயலாளர்கள், பொலிஸார், இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதிகளைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
