அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

 

கடந்த 3 ஆண்டுகளில் அரச ஊழியர்களுக்கு ரூ. 30,000 முதல் 40,000 வரை சம்பள உயர்வு: அமைச்சர் சரோஜா போல்ராஜ்

கடந்த காலங்களில் அரசு மேற்கொண்ட பொருளாதார மேம்பாடு மற்றும் நலத்திட்டங்கள் குறித்தும், நாட்டின் சுகாதாரத்துறை மற்றும் அரச ஊழியர்களின் நலன் குறித்து அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் சரோஜா போல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். 

சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களுக்கு மாறாக, அரச ஊழியர்களின் சம்பள உயர்வு என்பது ஏற்கனவே திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஒரு தொடர் நடவடிக்கையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, காலி, மொணராகலை மற்றும் பதுளை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் இதய சிகிச்சைகளுக்காகக் கராப்பிட்டிய மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்த நிலையை மாற்றி, கடந்த 2025-2026 காலப்பகுதியில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனை அமைப்புகளில் 20 இதய வடிகுழாய் சிகிச்சை (Catheterization) பிரிவுகள் அரசால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு மூன்று கட்டங்களாகச் சீரமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், 2025-ஆம் ஆண்டில் முதற்கட்ட உயர்வும், 2026-ஆம் ஆண்டில் இரண்டாம் கட்ட உயர்வும் வழங்கப்பட்ட நிலையில், வரும் ஜனவரி மாதத்துடன் இதன் மூன்றாம் கட்டச் சம்பள உயர்வு முழுமையடைவதாகக் கூறினார்.

 இதன் மூலம் இந்த மூன்று ஆண்டு காலப்பகுதிக்குள் அரசு ஊழியர் ஒருவரின் அடிப்படைச் சம்பளத்தில் தோராயமாக 30,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரையிலான உயர்வு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்தார்.

Post a Comment