தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில் போராடிவரும் வலி வடக்கு பலாலி மக்கள் இன்று தமது போராட்ட வடிவை மாற்றி வீதிக்கிறங்கி தமது வலிகளை வெளிப்படுத்திப் போடியிருந்தனர்.
உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டு இன்றுவரை மீழளிக்காததால் குறித்த பகுதி மக்கள் தொடர்ச்சியாக பலாலி சந்தியில் போராடி வருகின்றனர்.
இன்நிலையில் இன்று 9 ஆவது வாரமாகவும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் கடந்த வாரம் கூறியதுபோன்று போராட்டத்தின் வடிவை மாற்றி வீதிக்கிறங்கி போராடியிருந்தனர்.
இதனடிபடையில் பலாலி செபஸ்ரியார் ஆலயம் இருந்த இடத்திலிருந்து கறுப்பு உடை அணிந்து கறுப்புக் கொடி ஏந்தியவாறு ஊர்வலமாக பலாலிச் சந்திவரை போராட்டத்தை முன்னெடுத்திருந்த போராட்டக்காரர்கள், பலாலிச் சந்தியில் அமைந்துள்ள வீதிச் சோதனைச் சாவடி முன்பாக ஒன்றுகூடி கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை வலுவாக முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் பொலிசாருடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து போராட்டக் களத்தில் சற்று பதற்றமான நிலை ஏற்றட்டது.
எனினும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது அமைதிவழிப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து போராட்ட இடத்தில் வழமையான நேரம் வரை தொடர்ந்து முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

