கிழக்கு ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் டோக்கியோவை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை மையம் கூறியுள்ளது.
அவசர எச்சரிக்கை
கனமழை மற்றும் வெள்ளத்தினால் 20,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆபத்தின் தீவிரத்தை குறிக்கும் நிலை 5 அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அது நிலை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் மண்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாயம் இன்னும் நீடிப்பதாக பேரிடர் மேலாண்மை துறை எச்சரித்துள்ளது.
