தமிழர் பகுதியில் சினிமா பாணியில் நடந்த சம்பவம் ; இறுதியில் பொலிஸார் காட்டிய அதிரடி

 கிளிநொச்சி - மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சட்டவிரோதமாக முதிரை மரப்பலகைகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் ஒன்றை, பல கிலோமீற்றர் தூரம் சினிமா பாணியில் துரத்திச் சென்று கிளிநொச்சி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்தின் போது வாகனத்தின் சாரதி தப்பியோடியுள்ள நிலையில், அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் தகவலின்படி, மாங்குளத்திலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த குறித்த வாகனம், பொலிஸ் சோதனையில் சிக்காமல் இருக்க இரணைமடு சந்தியிலிருந்து திருவையாறு உள்வீதிக்குள் திருப்பப்பட்டுள்ளது.

அதேவேளை, திருவையாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் நோக்கில் பொலிஸார் வீதித்தடையை அமைத்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு கப் ரக வாகனத்தை மறித்து சோதனை செய்ய முற்பட்டபோது, சாரதி பொலிஸாரின் உத்தரவை மீறி அதிவேகமாக வாகனத்தைச் செலுத்தி தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பொலிஸார் மோட்டார் சைக்கிள்களில் வாகனத்தைத் தொடர்ந்து துரத்திச் சென்றனர்.

தப்பிக்க முயன்ற சாரதி திருவையாறு, இரத்தினபுரம், டிப்போ சந்தி, கனகபுரம், உதயநகர், விவேகானந்தா வீதி மற்றும் பாரதிபுரம் வழியாக மீண்டும் ஏ9 வீதியின் 155ஆம் கட்டைப் பகுதி வரை ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஏ9 வீதியின் 155ஆம் கட்டைப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது வாகனத்தின் சக்கரத்தின் ஆணிகள் உடைந்ததால் அது தொடர்ந்து செல்ல முடியாமல் நின்றுள்ளது.

வாகனம் நின்றவுடன் சாரதி அங்கிருந்து தப்பியோடிய நிலையில், வாகனத்தில் இருந்த அவரது உதவியாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Post a Comment