கோட்டாபயவின் ரிட் மனுவை உயர் நீதிமன்றுக்கு அனுப்புமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை

தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ  தாக்கல் செய்த ரிட் மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு சட்ட மா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தமையுடன், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் உள்ளடங்கியுள்ள கோரிக்கை அடிப்படை உரிமை மற்றும் அதனுடன் தொடர்புடையது என்பதால் அது தொடர்பில் விசாரணை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லையென குறிப்பிட்டார்.

இதன் காரணமாக இந்த மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறும் அவர் நீதிமன்றத்தை கோரினார்.

இதன்போது மனுதாரரான கோட்டாபய ராஜபக் ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தமது சமர்ப்பணங்களை முன்வைத்து நிறைவு செய்தார்.

வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 


Post a Comment