ஜெர்மனியில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்; காருக்குள் உயிரிழந்த குழந்தை; இலங்கைத் தமிழ் பெண் கைது!

ஜெர்மனியின் ஷோர்ண்டோர்ஃப் (Schorndorf) நகரில், காரின் உள்ளே மறதியாக விட்டுச் செல்லப்பட்ட இருபது மாதக் குழந்தை வெப்பம் தாங்காமல் உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.  சம்பவம்  தொடர்பாக  குழந்தையின் 44 வயதுடைய  இலங்கையை  பின்புலமாக  கோண்ட  தமிழ் தாய்  ஜெர்மன் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம்  தொடர்பில்  மேலும்  தெரியவருகையில், கடந்த மே 18 அன்று காலை, வழக்கம்போல் தனது குழந்தையைக் காப்பகத்தில் (Kindergarten) கொண்டு போய் விடுவதற்காகத் தாய் காரில் புறப்பட்டுள்ளார்.

குழந்தையின்  தாயார் , வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக, குழந்தையைக் காப்பகத்தில் இறக்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு, கார்ல் குழந்தை இருந்ததை மறந்து  அவர் நேராகத் தனது வேலைத்தலத்திற்குச் சென்று காரை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.

வேலை முடிந்த  பின்னர் பிற்பகல் 15:00 மணியளவில், குழந்தையைக் காப்பகத்திலிருந்து மீண்டும் அழைத்து வருவதற்காகக் காரின் அருகே வந்தபோதுதான், குழந்தை காரின் பின் இருக்கையிலேயே இருப்பதை அவர் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அங்கு   நிலவிய கடுமையான வெயில் காரணமாக, நீண்ட நேரம் மூடியிருந்த காருக்குள் ஏற்பட்ட அதிகப்படியான வெப்பத்தினால் மூச்சுத் திணறி குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஜெர்மனி நாட்டுப் பொது அரசு வழக்கறிஞர் அலுவலகமும் காவல் துறையினரும், கடமை தவறியதால் ஏற்பட்ட மரணம் என்ற பிரிவின் கீழ் அத்தாயைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்கள் எதிர்கொள்ளும் இயந்திரத்தனமான வாழ்க்கை முறை, கடுமையான மன அழுத்தம் மற்றும் உறவுகளின் ஆதரவற்ற தனிமை ஆகியவையே இத்தகைய துயர சம்பவங்கள்   நிகழ காரணம்  என   புலம் பெயர்  தமிழர்கள்  கவலை  வெளியிட்டுள்ளனர்.


Post a Comment