உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்றும் சரிவைச் சந்தித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், சில முக்கிய கச்சா எண்ணெய் வகைகளின் விலை 100 அமெரிக்க டொலர்களுக்கும் கீழ் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகச் சந்தை தரவுகளின்படி, ப்ரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 99.43 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. அத்துடன், WTI வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 93.17 டொலர்களாகவும், மர்பன் (Murban) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 96.20 டொலர்களாகவும் பதிவாகியுள்ளன. இது கடந்த தினத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 2 சதவீத வீழ்ச்சியாகும்.
இதேவேளை, போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா தயாரித்துள்ள 14 அம்சங்களைக் கொண்ட புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தாம் பரிசீலித்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், லெபனானுடனான போர்நிறுத்தத்தை மீறி, அந்நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் நகர்ப்புறப் பகுதி ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதன் காரணமாக வளைகுடா பிராந்தியக் கடற்பரப்பில் சிக்கியுள்ள வர்த்தகக் கப்பல்களை மீட்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட 'Project Freedom' நடவடிக்கையைக் கைவிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் தீர்மானித்தார். போரை நிறுத்துவதற்கான அரசியல் தீர்வுக்கு இடமளிக்கும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
