கொட்டாவ வீதியில் பழைய சந்தி பகுதியில் அதிவேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் வழுக்கிச் சென்று மதில் ஒன்றில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் மாலபே பகுதியிலுள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கணினி அறிவியல் துறையில் பட்டம் பயின்று வந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரும், ஹோமாகம பகுதியிலுள்ள வாகன திருத்தகம் (Garage) ஒன்றில் பணியாற்றி வந்த மற்றுமொரு இளைஞரும் ஆவர்.
உயிரிழந்த இருவரும் மேலும் சில மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுடன் இணைந்து, கொட்டாவையிலிருந்து அத்துருகிரிய நோக்கி அதிகாலை 2 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் பின்னர் படுகாயமடைந்த இருவரும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
