கெசல்கமுவ ஓயாவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று காணாமல் போயிருந்த நிலையில் இன்று (05) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் குறித்த பாடசாலை மாணவன் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நண்பர்களுடன் (04) பிற்பகல் இணைந்து நோர்வூட் கெசல்கமுவ ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த போதே நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
மாணவன் நீரில் மூழ்கியதைக் கண்ட அவரது நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்த போதிலும் அந்தப் பகுதி அதிக ஆழம் கொண்டதாக இருந்தமையால் அவர்களது முயற்சி தோல்வியடைந்துள்ளது.
பின்னர் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் தேடுதல் பணியினை ஆரம்பித்தனர்.
இதனை அடுத்து சுழியோடிகளின் உதவியும் கோரப்பட்டு தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் சிறுவன் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவர் நோர்வூட்டில் உள்ள பாடசலை ஒன்றின் 11ஆம் தரத்தில் அவர் கல்வி கற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
.jpeg)