2018 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில், பல்வேறு காரணங்களினால் நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (09) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு இலட்சத்து எட்டாயிரம் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஏனைய காரணங்களினால் மேலும் ஒரு இலட்சத்து ஐம்பத்தையாயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக அனில் ஜயந்த மேலும் தெரிவித்தார்.
"நிறுவனங்களின் பட்டியல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தயாரிக்கப்படுகிறது. கடைசி தொகைமதிப்பு 2013 இல் நடத்தப்பட்டது. எவ்வாறாயினும், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2018-2022 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, மொத்தமாக 1.3 மில்லியன் நிறுவனங்கள் உள்ளன. தற்போது 1,037,000 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பொருளாதார நெருக்கடியால் மூடப்பட்டவை 108,000 ஆகும். பொருளாதார நெருக்கடி தவிர ஏனைய காரணங்களால் மூடப்பட்டவை 155,000 ஆகும்" என அவர் விளக்கமளித்தார்.
