நாட்டின் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு, புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய QR கொடுப்பனவு முறைமைக்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் தமது முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, நேற்று(06.04.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுடனான விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய QR முறைமையை மக்களுக்கு மிகவும் எளிதானதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும் மாற்றுவதில் வங்கி முறைமைக்கு உள்ள பொறுப்புகளை ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தினார்.

இந்த திட்டத்தைச் செயற்படுத்தும் போது ஏற்படும் தடைகளை நீக்கி, சமூகத்தில் இதனை விரைவாகப் பிரபலப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,
"ATM இயந்திரங்கள் மூலம் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் போது வங்கி முறைமைக்கு அதிக செலவு ஏற்படுகின்றது. புதிய டிஜிட்டல் முறைமைக்கு மக்கள் மாறும் போது இந்தச் செலவுகளைப் பெருமளவு குறைக்க முடியும். இது பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான மற்றும் பாதுகாப்பான சேவையை வழங்கும்" என்று குறிப்பிட்டார்.
இலங்கை வங்கியின் பதில் பொது முகாமையாளர் வை.ஏ. ஜயதிலக்க பேசுகையில்,
இணையவழி பணப்பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அரசாங்கத்தின் இந்தப் புதிய டிஜிட்டல் பொருளாதாரப் பயணத்திற்கு வங்கித் துறை நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பில் டிஜிட்டல் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரிய, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோருடன் மக்கள் வங்கி, இலங்கை வங்கி, கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி மற்றும் ஹற்றன் நேஷனல் வங்கி உள்ளிட்ட முன்னணி அரச மற்றும் தனியார் வங்கிகளின் தலைவர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
