தென்மேற்கு பருவ பெயர்ச்சி மழைக் காலத்தில் எல் நினோ ((El Niño) நிலைமை உருவானால் செப்டம்பர் மாதம் வரை நாடு நீண்டகால வறட்சியை எதிர்நோக்கக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
ஜூன் மாதத்திற்குப் பிறகு வெப்பநிலை தீவிரமடையும் என எதிர்பார்ப்பதாகவும் இதனால் நாடு முழுவதும் நீண்ட வெப்பம் மற்றும் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வளிமண்டவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார்.
இவரது கருத்துக்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் இவ்வாறானதொரு நிலையை எதிர்கொள்ள போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விகளையும் உருவாகியுள்ளது.
நாடு தற்போது எல் நினோ அற்ற ஒரு நடுநிலையான நிலையில் உள்ள போதிலும் இதில் ஏற்படும் மாற்றங்கள் தென்மேற்கு பருவ பெயர்ச்சி மழைக் காலத்தின் மழைவீழ்ச்சியை கணிசமாகக் குறைக்கக்கூடும்.
இதன்மூலம் விவசாயம் நீர் விநியோகம் மற்றும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படலாம் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இருப்பினும் இந்த முன்னறிவிப்பின் நிச்சயமற்ற தன்மை சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் இத்தகைய எச்சரிக்கைகளின் துல்லியம் மற்றும் காலம் குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இடைப் பருவ பெயர்ச்சி காலம் மே மாத நடுப்பகுதியில் முடிவடையும். தென்மேற்கு பருவக்காற்று தற்காலிக நிவாரணத்தைத் தரும் என்று எதிர்பார்ப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.