கண்டியில் உள்ள முன்னணி பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் ஏற்பாட்டுப் பணிகளுக்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு பாடசாலை மாணவர்கள் இன்று (02) காலை பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்த விபத்தில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய மாணவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்தில் உயிரிழந்தவர் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் என்பதுடன், பலத்த காயமடைந்த மாணவர் தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கண்டி - திகனை வீதியில் பல்லேகல இராணுவ முகாமிற்கு முன்பாக, திகனை திசையிலிருந்து வந்த பேருந்துடன் மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில், இருவரும் பேருந்தில் சிக்கி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள கண்டியின் முன்னணி பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் (பிக் மெட்ச்) ஏற்பாட்டுப் பணிகளுக்காக அவர்கள் சென்றுகொண்டிருந்த போதே இந்த கோர விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
.jpeg)