பிரபல பின்னணி பாடகி Saindhavi ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப (Sa Re Ga Ma Pa) நிகழ்ச்சியில் தொடர்ந்து நடுவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சைந்தவி செய்த ஒரு செயல் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் முடிவடைந்த சரி கம பா சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பவித்ரா, தனது வாழ்க்கை கதையை ஆரம்பத்திலேயே மேடையில் பகிர்ந்திருந்தார். காதலித்து திருமணம் செய்த கணவர், குழந்தை பிறந்த சில வருடங்களில் விபத்தில் உயிரிழந்துவிட்டார். வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நினைத்த நிலையில், உறவினர்கள் கொடுத்த ஆதரவால் தான் மீண்டு வந்து இந்த மேடையில் நிற்கிறேன் என்று அவர் கூறியிருந்தார்.
அந்த நேரத்தில் சைந்தவி, "நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு நிஜ சகோதரி போல நான் துணையாக இருப்பேன்" என்று ஆறுதல் கூறியிருந்தார். பொதுவாக ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் இப்படியான வார்த்தைகள் சொல்லப்படுவது வழக்கம்தான். ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகு பலரும் அதை மறந்து விடுவார்கள் என்ற விமர்சனமும் இருக்கும். ஆனால் சைந்தவி அப்படிச் செய்யவில்லை என்பதுதான் இப்போது பேசப்படுகிறது.
நிகழ்ச்சி முடிந்த பிறகும், பவித்ராவையும் அவரது மகளையும் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான மாலுக்கு அழைத்து சென்று, அந்த குழந்தையுடன் நேரம் செலவிட்டுள்ளார். குழந்தையுடன் விளையாடி, அவளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து, முழு நேரமும் அவளுடன் குழந்தை மாதிரி கலந்துகொண்டுள்ளார். இந்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, சைந்தவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதைக் கண்ட ரசிகர்கள், "சொன்னதைச் செய்து காட்டியவர் சைந்தவி", "நிகழ்ச்சிக்காக மட்டும் பேசவில்லை, உண்மையிலேயே அக்கறை காட்டுகிறார்" என்று பாராட்டி வருகின்றனர்.
சைந்தவி சிறுவயதிலிருந்தே கர்நாடக இசை பயிற்சி பெற்றவர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இசையமைப்பாளர் G. V. Prakash Kumar ஜிவி பிரகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார், ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சமூகத்தில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். மென்மையான குரலால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார்.
அவரது பிரபலமான பாடல்களில் விழிகளில் ஒரு வானவில், எள்ளு வய பூக்களையே, நீயும் நானும் அன்பே போன்ற பல ஹிட்டான பாடல்கள் பலருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது. மெலடி பாடல்களில் அவரது குரல் தனி அடையாளம் பெற்றுள்ளது.
ஒரு பாடகியாக மட்டுமல்லாமல், ஒரு பெண்ணாகவும், ஒரு தாயாகவும், ஒரு சகோதரியாகவும் சைந்தவி நடந்துகொண்ட விதம் தற்போது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மேடையில் சொன்ன வார்த்தையை வாழ்க்கையிலும் காப்பாற்றியவர் என்ற பெயரை அவர் சம்பாதித்திருக்கிறார்.
