பெண் ஒருவருக்குச் சொந்தமான மோட்டார் வாகனத்தின் எரிபொருள் QR குறியீட்டை 'Override' செய்து , அந்த வாகனத்தின் தரவுகளுக்குப் புதிய QR குறியீட்டைத் தயாரித்து எரிபொருள் பெற்றுக்கொண்ட நபர் ஒருவரை நிட்டம்புவையில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.
இது குறித்து 1919 என்ற இலக்கத்தின் ஊடாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழுள்ள கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் இணையக் கண்காணிப்பு புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சட்டவிரோத QR குறியீட்டிற்கு எரிபொருளை வழங்கியவர்கள் குறித்தும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, இவ்வாறு எரிபொருள் QR குறியீடுகளை 'Override' செய்யும் நபர்கள் தொடர்பாக விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
