தாக்குதல் நடத்தப்பட்டால் அணு ஆயுதங்கள் மூலம் தென்கொரியாவை முழுமையாக அழிப்போம் ; கிம் ஜாங் உன்
அமெரிக்கா – தென்கொரியக் கூட்டு ராணுவப் பயிற்சி மார்ச் 9இல் தொடங்கவுள்ள நிலையில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய அறிவிப்புகள்: தென்கொரியாவுக்கு எச்சரிக்கை: “தென்கொரியா எங்களின் தீராத எதிரி நாடு. இனி பேச்சுவார்த்தைக்கோ, ‘ஒரே நாடு’ என்ற கொள்கைக்கோ இடமில்லை” என கிம் அதிரடியாக அறிவித்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட்டால் அணு ஆயுதங்கள் மூலம் தென்கொரியாவை முழுமையாக அழிப்போம் என அவர் அச்சுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவுக்கு நிபந்தனை: அமெரிக்காவுடன் சுமுக உறவு கொள்ளத் தயார், ஆனால், வடகொரியாவை அணு ஆயுத நாடாக அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் என்பதே கிம்மின் பிரதான நிபந்தனை.
அமெரிக்கா தனது ‘விரோதப் போக்கைக்’ கைவிட்டால் மட்டுமே கைகோர்க்க முடியும் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இராணுவ அணிவகுப்பும் ராஜதந்திரமும்: பியாங்யாங் மாநாட்டில் தனது 13 வயது மகள் கிம் ஜூ ஏ-வுடன் பங்கேற்ற கிம், பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பைப் பார்வையிட்டார். இதில் அமெரிக்காவைத் தாக்கும் நீண்ட தூர ஏவுகணைகள் தவிர்க்கப்பட்டது,
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் விரும்புவதையே காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அடுத்த 5 ஆண்டுகளில் பின்வரும் நவீன ஆயுதங்களைத் தயாரிக்க வடகொரியா இலக்கு நிர்ணயித்துள்ளது:
தண்ணீருக்கு அடியிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள்.
AI (செயற்கை நுண்ணறிவு) மூலம் இயங்கும் டிரோன்கள்.
எதிரி நாட்டுச் செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஆயுதங்கள்.
தென்கொரியாவைப் பகைத்துக்கொண்டு அமெரிக்காவுடன் மட்டும் பேச்சுவார்த்தைக்குக் கதவைத் திறந்து வைத்துள்ள கிம்மின் இந்த ‘புதிய பாதை’ ஆசியப் பிராந்தியத்தில் பாதுகாப்புச் சூழலைச் சிக்கலாக்கியுள்ளது
