நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி இருக்கும் நிலையில், அவர் தளபதி பற்றி பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் மிகவும் அன்பான தம்பதியினர் என்று ஒருகாலத்தில் போற்றப்பட்ட விஜய் - சங்கீதா உறவு இப்போது நீதிமன்ற படிகளை தொட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை இப்படி ஒரு திருப்புமுனையை சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில் தன் கணவருக்கும் மற்றொரு நடிகைக்கும் இடையே திருமண உறவை மீறிய நெருக்கம் இருப்பதாக கூறியிருப்பதாக தெரிய வருகிறது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் பிரிந்து வாழ்வதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு ஏப்ரல் 20 அன்று விசாரணைக்கு வரவுள்ளது சமீபத்தில் ஒரு திருமண விழாவில் விஜயும் திரிஷாவும் ஒரே மாதிரியான உடையில் ஜோடியாக வந்தது இணையத்தில் பரபரப்பை கிளப்பியது. இருப்பினும் இதுவரை இரு தரப்பிலும் இருந்து எந்த உறுதியான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் வழியாக அரசியல் அரங்கில் காலடி எடுத்துவைக்க தயாராகும் விஜய்க்கு இந்த தனிப்பட்ட விவகாரம் ஒரு கடினமான சவாலாக மாறியுள்ளது.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, இந்த சர்ச்சை அவரது அரசியல் பயணத்தில் தடையாக மாறுமா என்ற கேள்வி கட்சி வட்டாரங்களிலேயே எழுந்துள்ளது என்று சொல்லப்படுகிறது. சங்கீதா வாழ்நாள் ஜீவனாம்சம் கோரியுள்ளதாக வெளிவரும் தகவல்கள், இந்த வழக்கு எளிதில் முடிவுக்கு வராது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கு நீண்ட காலம் நீடிக்கும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் சங்கீதா பழைய பேட்டி ஒன்று இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.
நிச்சயதார்த்தத்திற்கு முன்பே விஜய் தனக்கு வைர மோதிரம் கொடுத்து ஆச்சரியப்படுத்தியதாகவும், திருமணத்திற்கு முன்பும் பின்பும் இருவரும் ஒருவருக்கொருவர் சர்ப்ரைஸ் கொடுத்துக்கொண்டதாகவும் சங்கீதா கூறியிருந்தார். அந்த இனிமையான நினைவுகளுடன் வாழ்ந்து வந்த ஜோடிக்கு, இன்று அதுவே கசப்பான சம்பவங்களாக மாறி உள்ளது. இனி வரும் நாட்களில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சினிமா, அரசியல், குடும்பம் என மூன்று முனைகளிலும் ஒரே நேரத்தில் போராடும் விஜய்யின் அடுத்த அத்தியாயம் எப்படி இருக்கும் என்று காலம் தான் பதில் சொல்லும்.
