நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பல நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
வத்தளை, குடகஹபிட்டிய சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் வாகனம் ஒன்றும் மிதிவண்டி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் 44 வயதுடைய ராகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார் என்பதுடன், வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை, எகொடஉயன, பாணந்துறை - மொரட்டுவை புதிய வீதியில் ஜய மாவத்தைக்கு அருகில் பாணந்துறை திசையை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த பாதசாரி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 50 வயதுடைய கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். எகொடஉயன பொலிஸார் விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ஹங்வெல்ல - கொழும்பு வீதியில் ரணால பிரதேசத்தில் கொழும்பு திசையை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, அதற்கு எதிர்த்திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர் 34 வயதுடைய கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்மாந்துறை பிரதேசத்திலும் இடம்பெற்ற விபத்தொன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். உழவு இயந்திரமொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்றதில், சாரதி அதே வாகனத்திற்குள் சிக்கி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவர் 40 வயதுடைய அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காரைதீவு பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
