அமெரிக்காவில் எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. இதற்கிடையே பெண் ஒருவர் அளித்த வாக்குமூலத்தில், தான் மைனராக இருந்தபோது டிரம்ப் தன்னை கட்டாயப்படுத்தி உறவு கொள்ள முயன்றதாகவும் இதனால் அவரது ஆணுறுப்பைத் தான் கடித்ததாகவும் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மிக மோசமான பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன். மைனர் சிறுமிகளைக் கடத்தி, அவர்களை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்வதே இவனது வேலை. இதுபோல பல மைனர் சிறுமிகளை பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்களுக்குத் தப்பான செயலுக்காக அனுப்பியுள்ளான். இது தொடர்பான குற்றச்சாட்டில் கைதாகி இருந்தபோது, எப்ஸ்டீன் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டான்.
பெண் வாக்குமூலம்
அதேநேரம் தங்கள் பெயர் இதில் வெளியே வரக்கூடாது என்பதற்காகச் சிலர் அவனைக் கொலை செய்துவிட்டதாகவும் சொல்லி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் வெளியாகி அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி அமெரிக்க நீதித்துறை நேற்று வியாழக்கிழமை இது தொடர்பாக சில புதிய எஃப்.பி.ஐ. ஆவணங்களை வெளியிட்டுள்ளது. அதில் பெண் ஒருவர் அளித்த வாக்குமூலங்கள் இடம்பெற்றுள்ளது. அந்த பெண் தற்போதைய அதிபர் டிரம்ப் தொடர்பாக சில பகீர் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
அதாவது ஜெப்ரி எப்ஸ்டீன் அந்த பெண்ணை டிரம்பிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அதன் பிறகு டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் கூறியுள்ளார். இதற்கு முன்பு எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் வெளியானபோது இந்த ஆவணம் வெளியிடப்படவில்லை. ஏனென்றால் அப்போது இந்த டாக்குமெண்ட்டை தவறானது என்று குறித்து இருந்தனர். இருப்பினும், விசாரணையில் இது தவறானது இல்லை எனத் தெரிய வந்ததால் இப்போது இது வெளியிடப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் கையாளப்பட்டதில் இதுபோல பல தவறுகள் நடந்திருக்கலாம் எனச் சொல்லி, இது தொடர்பாக ஜனநாயகக் கட்சியினர் தனியாக விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பலாத்காரம்
இப்போது வெளியிடப்பட்ட ஆவணங்களில், 2019ஆம் ஆண்டின் எஃப்.பி.ஐ. எடுத்த பல நேர்காணல்கள் தகவல்கள் இடம்பெற்று இருக்கிறது. அதில் அந்த பெண் இந்தச் சம்பவம் நடந்த போது தனக்கு 13 முதல் 15 வயது இருக்கும் எனக் கூறியிருக்கிறார். மேலும், எப்ஸ்டீன் மற்றும் டிரம்ப் இருவராலும் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அந்த பெண் குறிப்பிடுகிறார்.
டிரம்ப்
ஒரு நேர்காணலில், எப்ஸ்டீன் தன்னை நியூயார்க் அல்லது நியூஜெர்சிக்கு அழைத்துச் சென்று டிரம்ப்பிற்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறுகிறார். டிரம்ப் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியாக சில செயல்களைச் செய்யச் சொன்னதாகவும் இதனால் டிரம்பின் ஆணுறுப்பைக் கடித்துவிட்டதாகவும் அந்த பெண் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இந்தத் தகவல் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், எப்ஸ்டீன் விவகாரம் வெடித்தவுடன் தனக்கு பல்வேறு கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் அந்த பெண் கூறுகிறார். இது தொடர்பாக அமைதியாக இருக்கும்படியும் இல்லையென்றால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டல் வந்ததாக அந்த பெண் கூறுகிறார். எப்ஸ்டீன் விவகாரம் தொடர்பான ஆவணங்கள் அவ்வப்போது வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நீதித்துறை
அதேநேரம் எப்ஸ்டீன் குற்றச்சாட்டுகளை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனக்கு எப்ஸ்டீனை தெரியாது என்றே டிரம்ப் தொடர்ந்து சொல்லி வருகிறார். அதேபோல நீதித்துறை இந்த விசாரணை ஆவணங்களில் இருக்கும் சில தகவல்கள் பொய்யானதாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளது. இருப்பினும், இதைக் கடுமையாகக் கண்டித்துள்ள எதிர்க்கட்சியினர், டிரம்ப்பை காப்பாற்ற அவரது அரசு உண்மைகளை மூடி மறைப்பதாக விமர்சித்துள்ளது.
