களுத்துறை, கட்டுக்குருந்த கடற்பரப்பில் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் இராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார் என்று களுத்துறை தெற்கு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரியின் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் பயின்று வரும், களுத்துறை நாகொடை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய லினாஷ் தேவமிக என்ற மாணவனே இவ்வாறு மாயமாகியுள்ளார்.
மேற்படி மாணவன் நேற்று மாலை தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து பொழுதுபோக்குக்காக கட்டுக்குருந்த கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போது, திடீரென உருவான பலத்த இராட்சத அலையில் சிக்கிய மாணவன், நண்பர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது நண்பர்கள் கூச்சலிட்டதை அடுத்து அங்கிருந்தவர்கள் உதவ முற்பட்டும், மாணவன் கடலில் அடித்துச் செல்லப்பட்டார்.
மாணவன் மாயமானதையடுத்து, பிரதேச மக்களும் மீனவர்களும் இணைந்து கடலில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் பணிகளை விரிவுபடுத்தியுள்ளனர்.
