கொலம்பியாவின் புவேர்ட்டோ லெகுயிசாமோவில் திங்கள்கிழமை (23) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பெரும்பாலும் இராணுவ வீரர்கள் உட்பட 121 பேரை ஏற்றிச் சென்ற இராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது 66 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் இதனை உறுதிபடுத்திய துணை மேயர் கார்லோஸ் கிளாரோஸ், உயிரிழந்தவர்களின் உடல்கள் அந்தச் சிறிய நகரத்தின் உள்ள வைத்தியசாலை ஒன்றின் பிரதே அறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறினார்.மேலும், நகரத்தில் உள்ள இரண்டு வைத்தியசாலைகளில் காயமடைந்தவர்களுக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். விபத்து நடந்த இடத்திலிருந்து குறைந்தது 77 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக விமானப்படை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர்களின் இறுதி எண்ணிக்கை குறித்து அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். ஹெர்குலஸ் சி-130 விமானத்தில் 110 வீரர்கள் மற்றும் 11 பணியாளர்கள் உட்பட 121 பேர் இருந்ததாக விமானப்படை கூறியுள்ளது.
எக்குவாடோர் மற்றும் பெரு நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அமேசானிய மாகாணமான புடுமாயோவில் புவேர்ட்டோ லெகுயிசாமோ நகரம் அமைந்துள்ளது.விபத்து தொடர்பில் கொலம்பிய ஊடகங்கள் இணையத்தில் பகிர்ந்த படங்களில், விமானம் விபத்துக்குள்ளான வயலில் இருந்து கரும்புகை மேகம் எழுவதும், இராணுவ வீரர்களுடன் ஒரு லொறி சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதும் காணப்பட்டன.
