மொனராகலை, புத்தல - நாமண்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 26 வயது தாய் இன்று காலை உயிரிழந்தார்.
புத்தல-மொனராகலை வீதியில் உள்ள அரச தானியக் கடைக்கு அருகில் அமைந்துள்ள இந்த வீட்டின் ஒரு அறையில் நேற்று காலை தீப்பரவல் ஏற்பட்டதாக புத்தல பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அங்கிருந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் பலத்த தீக்காயங்களுக்கு ஆளாகினர்.
அவர்களின் சத்தம் கேட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அருகிலுள்ள அரச தானியக் கடையின் மேலாளர் மற்றும் அப்பகுதி மக்கள், காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்த்தனர்.
தீக்காயமடைந்த மூவரும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை தாய் உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்த 29 வயதுடைய அவரது கணவரும், 03 வயதுடைய மகளும் மேலதிக சிகிச்சைக்காக காலியில் உள்ள கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக புத்தல பொலிசார் தெரிவித்தனர்.
