இலங்கையில் இயங்கி வரும் வாடகை வாகன சேவைகளுக்காக முறையான ஒழுங்குமுறை கட்டமைப்பை நிறுவுவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.
வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன இது குறித்து கருத்து தெரிவிக்கையில், தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒழுங்குவிதிகள் தொடர்பான வரைவு தயார் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த புதிய சட்டக்கட்டமைப்பு முக்கியமாக மூன்று இலக்குகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வாடகை வாகன சாரதிகளின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், இத்துறையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக முறையான நலன்புரி திட்டங்களை அறிமுகப்படுத்துதல், செயலி வழி இயங்கும் நவீன வாடகை வாகன சேவைகள் மற்றும் பாரம்பரிய வாடகை சேவைகள் ஆகிய இரண்டையும் ஒரே கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருதல் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.
இந்த முன்மொழிவுகளை மேலும் செம்மைப்படுத்துவதற்காக, மாவட்ட ரீதியாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
