குறைந்த வருமானம் உடைய மற்றும் வீடற்ற 2,500 குடும்பங்களுக்கு, இவ்வருடத்துக்குள் புதிய வீடுகள் வழங்கப்படும் என நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகர்ப்புற மறுசீரமைப்பு பங்களிப்புத் திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு 14, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ‘ஸ்டேடியம் கம’ வீடமைப்புத் தொகுதியை பார்வையிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
வீடுகளை வழங்குவது என்பது வெறும் கட்டிடங்களை வழங்குவது அல்ல, அவை மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய முழுமையான குடியிருப்புகளாக இருக்க வேண்டும்.
மக்கள் குடியேறுவதற்கு முன்னர் பாதுகாப்பு, சமூகத் தேவைகள் மற்றும் வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. இவ்வருடத்தில் மூன்று வீடமைப்புத் திட்டங்கள் கையளிக்கப்படவுள்ளன.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் கொழும்பில் மொத்தம் 7,000 புதிய நகர்ப்புற வீடுகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
